கல்லீரல் உடலின் முக்கியமான பல வேலைகளை செய்கிறது. நாம் சாப்பிடுக்கூடிய உணவுகளிலிருந்து உடலுக்கு தீங்கு செய்ய கூடியதை பிரித்து உடனடியாக வெளியேற்றும் வேலையை செய்வதால் கல்லீரலை நம் உடலில் முக்கிய வேதி மற்றும் சுத்திகரிப்பு தொழிற்சாலை என்று கூறுவது தான் சரியாக இருக்கும்.
கொழுப்பு, புரதம், சில வைட்டமின்கள் ஆகியவற்றை உடைத்து குடல் மூலம் உடலில் உறிஞ்சப்பட உதவும் பித்த நீரை உற்பத்தி செய்கிறது. ஹார்மோன்கள், மருந்துகள், கொழுப்புகள், புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றம் போன்ற நம் உடலில் இருக்கும் கழிவுகள் மற்றும் நச்சுகளை வெளியேற்றுதல் போன்ற முக்கிய பணிகளை செய்கிறது.
மேலும் உடலுக்கு தேவையான வடிவத்தில் நாம் சாப்பிடும் உணவை மாற்றிக் கொடுக்கிறது. நம் உடனடி தேவைக்கு போக மீதமுள்ள ஆற்றலை கிளைகோஜனாக சேமித்து வைத்து தேவைப்படும்போது உடலுக்கு மீண்டும் கொடுக்கிறது. உடலின் தேவையை பொறுத்து தேவையான நேரத்தில் குளுகோஸையும் அளிக்கிறது. இப்படி உடலுக்கு நன்மை தரும் ஏராளமான வேலைகளை செய்கிறது.
இத்தகைய கல்லீரல், வேகமாக செல்களை புதுப்பித்துக் கொள்ளக்கூடியதாகும். இருந்தாலும், வயதானால் புதுப்பிக்கும் திறன் குறையும் என்றே மருத்துவர்களால் கருதப்பட்டது. ஆனால், ஜெர்மனியில் நடந்த ஒரு ஆய்வின்படி, ஒருவரின் வயது இருபதோ, ஐம்பதோ, எண்பதோ எதுவானாலும், அவரது கல்லீரலின் வயது மூன்றுதான் என்று தெரியவந்துள்ளது!
கடந்த 1950களில் அணுகுண்டு சோதனைக்குப் பின், கதிரியக்க நச்சுக்களால் பலர் பாதிக்கப்பட்டனர். அப்போது வாழ்ந்து மறைந்தோரின் கல்லீரல்களை, ஜெர்மனியின் டிரெஸ்டனில் உள்ள டெக்னிஷ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அதில், 20 முதல் 80 வயதுவரையுள்ள பலரது கல்லீரல் செல்களுக்கு வயது 3 ஆண்டுகளாக இருந்தன.
இதன் மூலம், பெரும்பாலானோரின் கல்லீரல் செல்கள் உருவானதிலிருந்து 3 ஆண்டுகளில் சிதைவதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். நம் உடலில் உள்ள பலவித நச்சுக்களை பிரித்தெடுக்கும் கல்லீரலானது, வேகமாக செல்களைப் புதுப்பித்துக் கொள்வதன் மூலம், நச்சுக்களின் தாக்குதலை சமாளிக்கிறது.
இந்தத் திறன் இருப்பதால் தான், மது, புகை போன்ற பழக்கங்கள் உள்ள பலரால் உயிரோடு நடமாட முடிகிறது. வருடந்தோறும் ஏப்ரல் 19-ம் தேதி உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கல்லீரல் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.